தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனை இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு: இறுதிகட்ட பணிகள் விறுவிறு
தாம்பரம், ஜூலை 11: தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையை இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அரசு பொது மருத்துவமனை, குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினசரி மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையை பல்வேறு வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதற்கான கட்டிடம் கட்டுவதற்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது.
6 தளங்கள், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை அறைகள், 289 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, என மொத்தம் 400 படுக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தரை தளத்தில் புற நோயாளிகள், முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, 2வது தளத்தில் மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, 3வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு, நீரிழிவு நோய் பிரிவு, 4வது தளத்தில் தீக்காயம் பிரிவு, 5வது தளத்தில் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, 6வது தளத்தில் ஆண், பெண்களுக்கான பொது பிரிவு என திட்டமிட்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புதிய மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, சுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குனர் மலர்விழி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் பேசியதாவது: தாம்பரம் அரசு மருத்துவமனை ஏற்கனவே குரோம்பேட்டையில் 1971ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்தார். 213 படுக்கைகள் உள்ள மருத்துவமனையில், தினசரி 1500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்றனர். தாம்பரம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த திட்டமிட்டு அதற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 318 சதுர அடியில் 6 தளங்களாக இந்த புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். மேலும், மருத்துவமனை திறப்பு விழாவின் ஒருபகுதியாக தாம்பரம், பல்லாவரம், கன்டோன்மென்ட், வண்டலூரில் ஒரு பகுதி, திருப்போரூரில் ஒரு பகுதி என புறநகர் பகுதியில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.