மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்
பழநி, அக். 24: பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் பாதையை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லாத தினசரி விரைவு வண்டி இயக்கப்பட வேண்டும்.
கோவையில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூருக்கு பழநி வழித்தடத்தில் இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். பழநியில் இருந்து திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும். கோவை- மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
