பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற ஆவணம் சமர்ப்பிக்கவும்
திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்பு தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை பெற வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் அல்லது திண்டுக்கல்லில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது முதிர்வு தொகை பெற வேண்டி நிலுவையில் உள்ளவர்களின் பட்டியல் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு தொகை பெற வேண்டியவர்கள், வைப்பு தொகை ரசீது அசல் அல்லது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் (தாய் மற்றும் மகள் இருவருக்கும்) ஆகியற்றை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது முதிர்வு தொகை பெற 18 வயது நிரம்பிய நிலுவையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை உடனடியாக சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
