விவசாயிக்கு ஆயுள் தண்டனை
பழநி, ஆக.19: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில், விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே கருமாசநாயக்கனூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). விவசாய கூலித்தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலை பணி நீக்கம் செய்து விட்டு, அதே பகுதியைச் சேர்ந்த வையப்பன் (55) என்பவரை முத்துலட்சுமி பணியமர்த்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த 2022ம் ஆண்டு டிச.23ம் தேதியன்று, வையப்பனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் சக்திவேல், சுத்தியலால் வையப்பன் தலையில் தாக்கி உள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இடையகோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, பழநி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிபதி மலர்விழி, நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் சக்திவேலிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.