நெடுஞ்சாலை துறை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி, நவ.29: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே டி.துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி(53). பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறையில், சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி விடுமுறை கேட்பதற்காக, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு காரில் சென்றுள்ளார். கூனையூர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியில் டூவீலரில் வந்த ஒருவரின் மீது கார் மோதியது. இதில் டூவீலரில் வந்த நபர் இறந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்து மற்றும் வழக்கு தொடர்பாக, தொடர்ந்து மனவேதனையில் இருந்த பூபதி, நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.