மலைக்கோயிலில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
காரிமங்கலம், ஆக.19: காரிமங்கலம் அருகே, மலைக்கோயிலில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் உள்ள மலை குன்றின் மீது அபய நரசிம்மர் சுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம், கோயிலில் ஆவணி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோயிலை பூட்டிச் சென்றனர். நேற்று காலை, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது சுவாமிக்கு அணிந்திருந்த 1 பவுன் தங்க நகை மாயமாகியிருந்தது. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கோயில் பூட்டை உள்ளே புகுந்து நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.