பிடிஓ அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்
காரிமங்கலம், ஆக.13: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சித்த திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் பிடிஓ அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிடிஓ.,க்கள் சர்வோத்தமன், தனலட்சுமி ஆகியோர் தலைமை வகித்து, அனைத்து ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆலோசித்தனர். மேலும், குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மை பணிகள், தெருவிளக்கு உள்பட பல்வேறு அடிப்படை பணிகளை ஆய்வு செய்து, சீரான முறையில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினர். ஆய்வு கூட்டத்தில், துணை பிடிஓ.,க்கள் கலைவாணி, சரத்குமார், சரளா, கந்தப்பன், சரண்யா மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.