பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 446 மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி பறையப்பட்டி, கோபிநாதம்பட்டியை சேர்ந்த ராமன் இயற்கை மரணம் அடைந்தை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும், மனைவியுமான தெய்வானைக்கு நிவாரணத்தொகை ரூ.35 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். மேலும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அசோக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) வள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.