கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சியில் ரூ.3.30 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
புதுக்கோட்டை, ஜூலை 10: கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சிப் பகுதிகளில், பல்வேறு புதிய திட்டப் பணிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் மீது அதிக அக்கறை கொண்டு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதில், பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் தேவைகளையறிந்து புதிய திட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சி, காந்திஜி சாலை அருகில், மூலதன மானியத் திட்டத்தின்கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள, மன்ற கூட்ட அரங்குடன் கூடிய புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுமானப் பணியினையும் மற்றும் மேற்பனைக்காடு சாலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டன.
எனவே, பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டப் பணிகளை, தொடர்புடைய அரசு அலுவலர்கள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர்.சிவக்குமார், கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர்.சுந்தரராஜன், மேற்பார்வையாளர். சீனிவாசன் மற்றும்.சண்முகநாதன், பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர்; கலந்துகொண்டனர்.