கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மாற்றுப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி, ஜூலை 15: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நினைவு தோரண வாயில் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியால் காந்தி மண்டபம் மற்றும் கடற்கரை நோக்கி செல்லும் முக்கிய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கடற்கரைக்கு சென்று வந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள், உள்ளூர் வர்த்தகர்கள் அதிகாரிகளிடம் கூற அவர்கள் புதிய நடைபாதை ஏற்பாடு செய்ய வேண்டி கன்னியாகுமரிக்கு வந்த அமைச்சர் மனோ தங்கராஜிடம் வலியுறுத்தினர். அமைச்சர் மாவட்ட கலெக்டர் அழகுமீனாவிடம் இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர் நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.