விழுப்புரத்தில் பரபரப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை புரட்டியெடுத்த பொதுமக்கள் முற்றுகையிட்டு ஹெச்.எம்மிடம் வாக்குவாதம் போக்சோவில் கைது செய்து விசாரணை
விழுப்புரம், ஆக. 30: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே விழுப்புரம் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக பள்ளி செல்ல மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது தனது வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர் தவறான தொடுகையில் ஈடுபடுவதாகவும் இதனால் உடல் வலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் மாலையே சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே நேற்று, பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவியை அழைத்து கொண்டு பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பார்த்ததும் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.தகவலறிந்ததும் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது விழுப்புரம் அருகே முகையூரை சேர்ந்த பால்வில்சன்(48) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் பள்ளிமுன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இடைநிலை ஆசிரியர் பால்வில்சனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினரும் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், மாணவிகள், சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதனைதொடர்ந்து இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் பால்வில்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் 7ம்வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
புகார் பெட்டி எங்கே? பள்ளி கல்வித்துறை அலட்சியம்...
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், குறிப்பாக பாலியல் துன்புறுத்தல் போன்ற வெளியே சொல்ல முடியாத பிரச்னைகளை ரகசியமாக விசாரிக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் புகார் பெட்டி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் இது முறையாக கண்காணிக்கப்படவில்லை. விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஆனால் ஆசிரியருக்கு பயந்து இதைவெளியே சொல்லமுடியாமல் மன, உடல் வலியோடு இருந்தவர் கடைசிகட்டத்தில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். எனவே புகார் பெட்டி வைத்திருந்தால் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவித்திருப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.