மங்கலம்பேட்டை அருகே காதலி இறந்த துக்கம் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை
மங்கலம்பேட்டை, அக். 26: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் நரேன் கார்த்திக்(20). இவர் கோவை நேரு பொறியியல் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் ராஜகுமாரி, கடந்த ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். நரேன் கார்த்திக்கும் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது காதலி கடந்த 21ம் தேதி நடந்த விபத்தில் இறந்து விட்டார். இதனால் துக்கத்தில் இருந்து வந்த நரேன் கார்த்திக் சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாத்தா கொளஞ்சி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.