குடிக்க பணம் தராததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சாவு
ரெட்டிச்சாவடி, செப். 14: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த கீழ் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(36), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சிவமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ஆனந்தராஜ் குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆனந்தராஜ் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் ஆனால் சிவமதி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் விரக்தியில் இருந்த ஆனதராஜ், வீட்டில் இருந்த பெட்ரோலை தன்மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆனந்தராஜின் தாய் கம்சலா அளித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.