காதலன் போனில் திட்டியதால் ஆன்லைனில் காதலி புகார்
கடலூர், அக். 12: பேஸ்புக் மூலம் காதலித்து வரும் ஜோடி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், போனில் காதலன் திட்டியதால் ஆன்லைனில் காதலி அளித்த புகாரின்பேரில் கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீன யுகத்தில் காதல் பல்வேறு பரிமாணங்களை எடுத்துள்ளது. தற்போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் காதலிப்பது அதிகரித்துள்ளது. நேரடியாக ஒருவரையொருவர் பார்க்காமல் காதலிக்கும் இந்த ஜோடிகள் திருமண வாழ்விலும் இணைந்து வருகின்றனர். சில சமயங்களில் இருவருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே சண்டை போட்டுக் கொண்டு பிரிகின்றனர்.
இதேபோன்று, கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த சாய்தர்மா என்பவருக்கும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக ஒருவரையொருவர் பேஸ்புக்கில் மட்டும் பார்த்து கொண்டு, போன் மூலம் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், தற்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் தர்மா, அவரது நண்பர் ராம் ஆகியோர் அந்த இளம்பெண்ணை போனில் அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின்பேரில் சாய் தர்மா, ராம் ஆகிய 2 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேரில் காதலிக்கும் ஜோடிகள் தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டு, காவல் நிலையம், வழக்கு என்று சிக்கும் நிலை மாறி தற்போது, இணையதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஒருவரையொருவர் பார்க்காமலே ஆன்லைன் மூலம் காதலித்து, சண்டை போட்டு, நேரடியாக காவல் நிலையம் வராமல் ஆன்லைன் மூலமே புகார் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.