சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார்
சிதம்பரம், டிச. 2: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பல தரப்பினரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நடராஜர் கோயிலுக்கு வந்திருந்தனர். அந்த குழுவினர் சாமி தரிசனம் செய்வதற்கு கோயிலுக்குள் சென்றபோது, குழுவிலுள்ள மரியா ஜோசப் என்ற பெண் ஒருவர் கோயிலில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு வயிற்று வலி இருப்பது தெரிய வந்தது. அதனை அடுத்து ஸ்பெயின் நாட்டு குழுவினருடன் மரியா ஜோசப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கோயில் வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.