கலெக்டர் வழங்கினார் பெரம்பலூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர்,ஜூலை 15: பெரம்பலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.300 க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில், விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செவிலியர் பயிற்சி மாணவியர் பங்கேற்ற பேரணியை மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் நேற்று (14 ம்தேதி) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1987 ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை 500 கோடி எட்டியதை முன்னிட்டு, மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சபை வெளியிட்ட அறிவிப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப் படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில்,மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவியர்கள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவிலியர் பயிற்சி மாணவியர் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. இப்பேரணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். பேரணியில் நிரந்தர மற்றும் தற்காலிக குடும்ப நல முறைகள் குறித்தும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வழிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் (பொ) டாக்டர் ஜெயந்தி, மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா, வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், மாவட்ட குடும்பநல செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.