அமைகிறது புதிய ரவுண்டனா தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு
கோவை, செப்.3: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழுகள் அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணி செய்திருக்க வேண்டும். எவ்வித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாவட்ட அளவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது காவல்துறையில் குற்றவியல் நடவடிக்கை ஏதுவும் நிலுவையில் இல்லை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதுவும் நிலுவையில் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மூலத்துறை பம்ப்ஸ் பள்ளி ஆசிரியர் திருமுருகன், காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை சுமதி, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ராமசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை அற்புத மேரி, மாநகராட்சி துவக்கப்பள்ளி மசக்காளிபாளையம் இடைநிலை ஆசிரியர் சக்திவேல், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஷாகிலா, கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயூஸ், நெகமம் பள்ளி தலைமை ஆசிரியை கோமதி, மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்தகுமார், அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நளினி, பிரஸ் காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விவேகானந்தன், முதுகந்துரி பஞ்சாயத்து யூனியன் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, பம்ப்ஸ் பெட்டதாபுரம் பள்ளி மதியழகன் உள்பட மொத்தம் 13 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் தினமான நாளை மறுநாள் சென்னையில் விருது வழங்கப்படவுள்ளது.