முதல்வர் மருந்தகங்களில் இணைப்பதிவாளர் சோதனை
ஊட்டி, ஜூலை 11: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கேத்தி பாலாடாவில் செயல்பட்டு வரும் கெம்பையாடா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் மற்றும் சாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனிநபர்தொழில்முனைவோரால் நடத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆகிய மருந்தகங்களில் நேற்று முன்தினம் நீலகிரி மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். நியாயவிலைக் கடைகள் மூலம் முதல்வர் மருந்தக மருந்துகள் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலை விவரங்களை ஒப்பீடு செய்து துண்டறிக்கைகள் அச்சிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் விற்பனை அதிகரிக்க முதல்வர் மருந்தகத்தை மக்கள் நடமாட்டம் உள்ள வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடர கெம்பையாடா தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கத்தின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.