சைக்கிள் பாதை, காட்சி தளங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் மெரினா கடற்கரை சாலையை மேம்படுத்த புதிய திட்டம்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஆக.27: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர். அவர்களை துணை மேயர் மகேஷ் குமார், ‘இருக்கையில் அமருங்கள், இல்லையென்றால் வெளியேறுங்கள்’ என்று கூறினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஜெயராமன், ரேணுகா, பிரியதர்ஷினி, சரஸ்வதி ஆகியோர் மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து மன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் பேசினர். 61வது வார்டு கவுன்சிலர் பாத்திமா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) பேசுகையில், ‘‘சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளது. இதில், 27 சதவீதம் தெருநாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாய்களுக்கும் எப்போது முழுமையாக கருத்தடை செய்யப்படும்,’’ என்றார்.
இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ‘‘தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 15 மண்டலங்களிலும் நாய்கள் இன கருத்தடை மையம் அமைக்கப்படும். அனைத்து தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும்,’’ என்றார். கேள்வி நேரம் முடிந்ததும், துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் டிராபிக் சிக்னல்களில் குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் தாய்மார்களுக்கு டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது. உடன் வருபவர் குழந்தையின் சட்டபூர்வ பெற்றோரா அல்லது பாதுகாவலர் என்பதில் உறுதிப்படுத்திட இந்த டிஎன்ஏ சோதனை தேவைப்படுகிறது.
குழந்தைக்கும் உடன் வரும் பெரியவருக்கும் இடையே உயிரியல் தொடர்பு இல்லாத சந்தர்ப்பத்தில் பெரியவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து குழந்தையை மீட்டு காப்பகங்களில் வைத்து பாதுகாக்க திட்டம் வழிவகை செய்கிறது. அதேபோன்று சென்னையிலும் டிராபிக் சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. பெரும்பாலும் இளம்பெண்கள் தெருக்களில் தூங்கும் குழந்தையை துணியால் கட்டி பிச்சை எடுப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, பஞ்சாபில் செயல்படுத்தும் திட்டத்தை போன்று நம்முடைய சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையும் செய்திட வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, ‘‘சென்னை மாநகராட்சியில் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்,’’ என்றார்.
இதையடுத்து, மாமன்ற கூட்டத்தில் 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தீர்மானங்களின் விவரம் வருமாறு. மெரினா கடற்கரை சாலையில், உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2.30 கி.மீ நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்திற்கு சிந்தட்டிக் சைக்கிள் பாதை உருவாக்கப்படும். காமராஜர் சாலையில் இருபுறமும் 9 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும். 3 புறகாவல் நிலையங்கள் அமைக்கப்படும். காமராஜர் சாலையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை கண்டுகளிக்கும் வகையில் 9 இடங்களில் காட்சி தளங்கள் அமைக்கப்படும்.
சைக்கிள் பாதையில் தெரு விளக்குகள் மற்றும் பொல்லார்ட் விளக்குகள் அமைக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் மெரினா கடற்கரை காமராஜர் சாலை மேம்படுத்தப்படும். ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக மாமன்ற கூட்டம் நடத்துவதற்காக புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.80 கோடி மதிப்பீட்டில் இந்த பணியை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. வள்ளலார் நகர் பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ராமகிருஷ்ணா பள்ளி அருகில் உள்ள காலி நிலத்தை தற்காலிக பேருந்து நிலையமாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாநகர் மண்டலத்தில் திருநங்கைகளுக்கான ‘அரண்‘ என்னும் தங்கும் விடுதி அமைப்பது உள்ளிட்ட 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.