சடையன்குப்பம் - ஜோதி நகர் இடையே மணலி சாலையில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து பாதிப்பு
திருவொற்றியூர், அக்.26: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 9500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் உபரி நீர் கொசஸ்தலை ஆறு வழியாக மணலி புதுநகர், சடையன்குப்பம் பகுதியை கடந்து எண்ணூர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றும் அளவு உயர்த்தப்பட்டு வருவதால் மணலி அருகே சடையன்குப்பம் மற்றும் இருளர் காலனியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு அருகே தெருக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மேலும் சடையன்குப்பம் - திருவொற்றியூர் ஜோதி நகர் இணைப்பு சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளத. தொடர்ந்து, உபரி நீர் வருகை அதிகமாக வாய்ப்புள்ளதால், சடையன்குப்பம், இருளர் காலனி, பர்மா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை மாநகராட்சி, மணலி மண்டல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சடையன்குப்பத்தில் குடியிருப்புகளுக்கு அருகே உபரி நீர் சூழ்ந்து வருவதால் பீதியடைந்த ஒரு சிலர் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மணலி மண்டல உதவி ஆணையர் தேவேந்திரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் விஜய், சோமசுந்தர்ராஜ், மற்றும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்தால் பொதுமக்களை மீட்டு, தங்க வைக்க முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மணலி மண்டலத்திற்கு உட்பட்ட கொசஸ்தலை ஆறு கரையோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.