தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
தாம்பரம், அக்.16: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தாம்பரம் மாநகர காவல்துறை, பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தப்பட்டுள்ளது’.
கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை விவரங்கள் புறப்படும் பயணம்: ‘17 மற்றும் 18ம்தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு பெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்லலாம். மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம், ஜிஎஸ்டி சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு - பெரும்புதூர் - திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
திரும்பும் பயணம்: 21 மற்றும் 22ம்தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல், செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை - வாலாஜாபாத் - காஞ்சிபுரம் - பெரும்புதூர் வழியாக - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம். சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம், பெரும்புதூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள், வன்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்.
அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், விடுமுறை முடித்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுப்படுத்த, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களிலிருந்து, கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள் நெரிசலற்ற பயணத்திற்காக ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் வழித்தடங்களைப், பயணிகள் புறப்பாடு மற்றும் திரும்பி வருதல் பயணத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிறப்பு ரயில்கள்: சாலை நெரிசலைத் தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும்.
சிறப்பு பேருந்துகள்: பயணிகள் வசதிக்காக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 2,092 சிறப்புப் பேருந்துகள், 16ம் தேதி(இன்று) முதல் 19ம்தேதி வரை இயக்கப்பட உள்ளது. எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.