பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டிடர்ெஜன்ட், மசாலா தயாரித்த குடோனுக்கு சீல்
திருவொற்றியூர், செப்.13: திருவொற்றியூர் சாத்துமா நகர், காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு குடோனில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டிடர்ஜென்ட் பவுடர், மசாலா பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மும்பையில் இருந்து அதிகாரிகள் நேற்று மாலை காந்தி நகர் பகுதிக்கு வந்து, அந்த குடோனுக்குள் நுழைந்து சோதனை செய்தனர். அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக மசாலா, டிடர்ஜென்ட் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரிக்காக தயாராக இருப்பது தெரிந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முன்னாவரதன் (55) என்பவரது பெயரில் நடத்தப்படும் இந்த குடோனில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பொருட்களை தயாரித்து விற்றது தெரியவந்தது. அவரிடம் திருவொற்றியூர் போலீசார் உதவியுடன் மும்பை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.