பிளஸ்1 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கலாம்
சென்னை, ஆக.13: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில்பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் விடைத்தாள் நகல்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதன்படி இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து ெகாள்ளலாம். விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு இதே இணை தள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 14ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505, மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, பிற பாடங்களுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும்.