வார இறுதி நாட்களையொட்டி 860 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்
சென்னை, டிச.11: வார இறுதி நாட்களையொட்டி நாளை முதல் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க இதுவரை 19,734 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிகை காலம், முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 320 பேருந்துகளும், நாளை மறுநாள் 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பேருந்துகளும், நாளை மறுநாள் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த வார விடுமுறைக்காக நாளை 7,838 பயணிகளும் நாளை மறுநாள் 3,573 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.