தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணி : புதிய மாடி, ஏசி காத்திருப்பு அறைகள் லிப்ட்கள், விரிவாக்க பார்க்கிங்கும் உண்டு
சென்னை, செப்.10: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ருத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னை பெருநகருக்கு வந்து செல்கின்றனர். அதேபோல், சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமானோர் மின்சார ரயில்கள் மூலமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அமைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு ரயில் நிலையம், தினசரி 60,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த நிலையம் தற்போது அம்ருத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிலைய உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், தடையற்ற பயண அனுபவத்திற்காக பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
அதன்படி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதிய நிர்வாகக் கட்டிடம், கான்கோர்ஸ் தாழ்வாரம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களுக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்திலுள்ளன. நிலைய முகப்பு மற்றும் பாதசாரிகள் நடைபாதையின் மேற்பட்ட பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டது. எண் 5 மற்றும் 6ல் மேற்பரப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடைமேடை எண் 7 மற்றும் 8ல் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடைமேடைகளில் மேற்கூரைகள் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நடைமேடை எண் 2 மற்றும் 7,8 அருகே இரண்டு லிப்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. நடைமேடை எண் 3,4 மற்றும் 5,6ல் கூடுதல் லிப்ட்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. பாதசாரிகள் நடைபாதை, பயணிகள் தகவல் அறியும் பதாதைகள் மற்றும் மின்சாரப் பணிகள் ஆகியவற்றின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நவீன வடிவமைப்புடன் புதிய மாடி, தரை நிலை கட்டிடம், விசாலமான கான்கோர்ஸ் பகுதி, ஏசி காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள் மற்றும் விஐபி ஓய்வறைகள், விரிவாக்கப்பட்ட பார்க்கிங் வசதி மற்றும் பாதசாரிகளுக்கான நடப்புப் பாதைகள், நவீன பொது தகவல் மற்றும் காட்சி அமைப்பு, சிசிடிவி கண்காணிப்புடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்ருத் நிலையத் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு ரயில் நிலையம் விரைவில் உலகத் தரத்திற்கேற்ப பயணிகள் வசதிகளையும், செயல்திறனும் கொண்ட நிலையமாக உருவெடுக்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.