மாநகராட்சி மண்டலங்களில் 13ம் தேதி முதல் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக பொருட்கள் விநியோகம்
சென்னை, செப். 11: சென்னை மாநகராட்சி மண்டலங்களில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக பொருட்கள் 13ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று, வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளின் அறிவிப்பு பலகையில் இருந்து விநியோக தேதியினை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தினை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்படி வருகிற 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் விநியோகம் செய்யப்படும். திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை 4 நாட்கள் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.