தந்தை படுகொலைக்கு பழிக்குப்பழியாக 17 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவன்: பரபரப்பு வாக்குமூலம்
அண்ணாநகர், ஆக.8: தந்தை படுகொலைக்கு பழிக்குப்பழியாக, 17 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (42), பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்ததுடன், அதிமுக நிர்வாகியாக இருந்துகொண்டு திருமண நிகழ்ச்சிக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் ராஜ்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது, பைக்குகளில் வந்த 10 பேர், பட்டாக் கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்து ராஜ்குமாரை சுற்றிவளைத்து வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற ராஜ்குமாரை, விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த டிபி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணவேணியின் வளர்ப்பு மகன் செந்திலை கடந்த 2008ம் ஆண்டு கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகளில் ராஜ்குமார் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
மேலும், பிரபல ரவுடி தீச்சட்டி முருகன், ஜெயராஜ் மற்றும் பைனான்சியர் ஆறுமுகம், பிரான்சிஸ், குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகியோரும் செந்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இதில் தீச்சட்டி முருகன், ஜெயராஜ் மற்றும் பைனான்சியர் ஆறுமுகம் ஆகியோர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டனர். பிரான்சிஸ் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். செந்தில் கொலை வழக்கில் தொடர்புடைய குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகிய இருவர் மட்டுமே தற்போது உயிருடன் இருந்தனர். செந்தில் கொலை செய்யப்பட்டபோது, அவருக்கு 2 வயதில் யுவனேஷ் என்ற குழந்தை இருந்தது. இந்த யுவனேஷ்க்கு தற்போது 19 வயதாகிறது. கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார்.
இவர், தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்று, சிறு வயதில் இருந்தே காத்திருந்துள்ளார். அதன்படி, தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் வெளியாட்கள் என 10 பேருடன் சேர்ந்து, ரவுடி ராஜ்குமாரை கொல்ல திட்டமிட்டு, அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். அதன்படி, சம்பத்தன்று அவரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, யுவனேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நேற்று அதிகாலை கைது செய்தனர். அப்போது, தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடியை கொன்றேன், என யுவனேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில், தொடர்புடைய கல்லூரி மாணவன் இஸ்ரவேல், டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தந்தையை கொன்றவர்களை 17 ஆண்டுகள் காத்திருந்து கல்லூரி மாணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.