சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை
சென்னை, டிச.7: தாம்பரம் பகுதியில் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமிய சிறுவர், சிறுமிகளுக்கு குர்ரான் கற்பிக்கும் ஆசிரியராக சுல்தான் அகமது (47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி மசூதியில் சிறுமி குர்ரான் படிப்பதற்காக சென்றபோது, சுல்தான் அகமது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி, சுல்தான் அகமதுவை தள்ளிவிட்டு தப்பி வந்து, தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சுல்தான் அகமது மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் மைதிலி இருதரப்பு வாதங்களை கேட்டு வாதாடினார். தொடர்ந்து வழக்கின் இறுதிகட்ட விசாரணையை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு, சுல்தான் அகமது குற்றம் புரிந்ததை உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம்வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.