இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் அமைக்க 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, ஆக.6: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், இயற்கை எரிவாயு நிரப்புளண நிலையங்களை அமைப்பதற்கு 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. பேருந்துகளுக்கு மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 2 எரிவாயு விநியோக நிறுவனங்களான டொரண்ட் காஸ் மற்றும் திங்க் காஸ் நிறுவனங்களுடன், 2 பேருந்து டிப்போக்களில் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிரப்பும் நிலையங்களை அமைப்பதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள அம்பத்தூர் டிப்போவிலும், வரதராஜபுரம் டிப்போவிலும் அமைக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் டொரண்ட் காஸ் செயல்பாடுகளை மேற்கொள்ளும், அதேவேளையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளை திங்க் காஸ் நிறுவனம் சேவையை மேற்கொள்ளும்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது 240 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அது படிப்படியாக 1,000 பேருந்துகள் மாற்றப்படும். அம்பத்தூர் முதல் இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், அங்கு ஏற்கனவே குழாய் வலையமைப்பு உள்ளது. வரதராஜபுரம் அவுட்டர் ரிங் சாலையில் இருப்பதால், தளவாட ரீதியாக சிறந்த இடமாக உள்ளது. வரதராஜபுரத்தில் திங்க் காஸ் அமைக்கவுள்ள எரிவாயு நிரப்பும் நிலையம், ஒரு நாளைக்கு 125 பேருந்துகளுக்கு சேவையளிக்கும் வகையில், 7,000 கிலோ விநியோக திறனுடன் வடிவமைக்கப்படும். இந்த மாற்றத்தை பொருளாதார ரீதியாக நடைமுறைப்படுத்த, மாநகர போக்குவரத்து கழகம் சாதகமான விலை திட்டத்தை உருவாக்கியுள்ளது. முதல் 3 ஆண்டுகளுக்கு, எரிபொருள் விலை டீசலின் விலையை விட 6 சதவீதம் குறைவாக, அதாவது டீசல் லிட்டருக்கு ரூ.90.65 இருக்கும்போது, இயற்கை எரிவாயு விலை 85.2 ரூபாயாக இருக்கும். அதனை தொடர்ந்து ஒப்பந்த காலம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4 குறைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.