நாளை முதல் 10ம் தேதி வரை தாயுமானவர் திட்டத்தில் ரேஷன்பொருள் விநியோகம்
சென்னை, டிச.5: தாயுமானவர் திட்டத்தில் நாளை முதல் 10ம் தேதி வரை முதியோர், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.