கோயம்பேடு மார்க்கெட்டில் கார்த்திகை தீபத்தன்று பூக்கள் விலை கடும் சரிவு: தொடர் மழையால் மக்கள் வருகை குறைந்தது
அண்ணாநகர், டிச.4: விடியவிடிய பெய்த தொடர் மழையால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மக்கள் பூ வாங்க வருகை குறைந்ததால், கார்த்திகை தீபத்தன்றும் பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்களை வாங்க மக்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால் நேற்று காலை பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.2,500யில் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கும், ஐஸ் மல்லி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.1,500க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் கனகாம்பரம் ரூ.500யில் இருந்து ரூ.400க்கும், அரளி பூ ரூ.200ல் இருந்து ரூ.150க்கும், சாமந்தி ரூ.100ல் இருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.100ல் இருந்து ரூ.60க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160ல் இருந்து ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.