சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி: பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை, செப்.3: சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூளைமேடு, வீரபாண்டி நகர், 1வது ெதருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக தண்ணீர் தடையின்றி வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதன் அருகே தடுப்பு ஏதும் அமைக்கப்படாமல் இருந்துள்ளது. அதற்கு பதில் மழைநீர் வடிகால் பள்ளத்தின் மேல் மரப்பலகையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், தற்செயலாக பள்ளத்தில் பார்த்தபோது, சுடிதார் அணிந்து இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலைகீழாக கழுத்து எலும்பு உடைந்த நிலையில் கிடந்தார். உடனே பொதுமக்கள் அவரை மேலே தூக்கி பார்த்த போது, அவர் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி இருந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது, அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்த சூளைமேடு போலீசார், விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேநேரம் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது, கோடம்பாக்கம் பொன்னுசாமி தெருவை சேர்ந்த தீபா (42) என்பது தெரியவந்தது. இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகளுக்கு திருமணமான நிலையில், கணவரை பிரிந்து தாய் தீபாவுடன் வசித்து வருகிறார். உறவினர் ஒருவரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் இரவு சூளைமேடு வந்த தீபா, அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார்.அப்போது, அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால், சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்துள்ளார். அப்போது, கழுத்து எலும்பு முறிந்ததால் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மழைநீர் வடிகால் பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் உடனே புதிய சிலாப் கொண்டு மூடினர்.மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் வீரபாண்டி நகர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து ெசன்றனர்.