தா.பழூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
தா.பழூர், நவ. 21: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் செப்பனிடுதல், தேவைப்படும் இடங்களில் மழை நீர் தேங்காத வகையில் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை பணியாளர்கள் சாலையோரத்தில் உள்ள கருவேல முட்புதர்களை அகற்றும் பணியும் நடைபெறுகிறது. அதுபோல், சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் முறிந்து விழும் அபாயம் உள்ள மரங்களை கண்டறிந்து அவற்றை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர். ஜெயங்கொண்டம் முதல் மதனத்தூர் வரை உள்ள சாலையிலும், அன்னங்காரம்பேட்டை முதல் விளாங்குடி வரை உள்ள சாலையிலும் இந்த பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம், மழைக் காலங்களில் சாலைகளில் தடைகள் ஏற்படாமல் பயணங்கள் நடைபெறவும் பாதசாரிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை பணிகளை சாலை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி அருகே உள்ள காக்கப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையின் இரு பகுதியிலும் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் சாலை ஆய்வாளர் சசிக்குமார் தலைமையிலான சாலை பணியாளர்கள் மண் வெட்டி கொண்டு தேங்கிய நீரை வெளியேற்றி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.