பெரம்பலூர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 68 பயனாளிகளுக்கு ரூ.12.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர்,நவ.18: பெரம்பலூரில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 336 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 68 பயனாளிகளுக்கு ரூ.12.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மிருணாளினி வழங்கினார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் மிருணாளினி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களை யும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்டக் கலெக்டர், தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப் பெறுவதை சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 336 மனுக்களை பொது மக்களிடமிருந்து மாவட்டக் கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு வன் கொடுமைத் திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பதிவறை எழுத்தர் மற்றும் சமையலருக்கான அரசுப் பணிக்கான நியமன ஆணைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகைக்கான ஆணைகளையும் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வழங்கினார். மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, 16 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அடை்டைகளையும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுஅளித்த 40 பயனாளிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்துடன் தலா ரூ.25935 மதிப்பில் புல் நறுக்கும் கருவிகளையும் என 68 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்து 850 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டகலெக்டர்,
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தேவநாதன், கால் நடை பராமரிப்புதுறை இணை இயக்குநர் டாக்டர் பகவத் சிங், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் சிவக் கொழுந்து, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் வாசுதேவன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மூர்த்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் கவியரசு மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.