விளை பொருட்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்: ஜெயங்கொண்டம், திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஜெயங்கொண்டம், ஆக.7: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து 8 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜெயங்கொண்டம் தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களான எள் மற்றும் கடலையை விற்பனை செய்வதற்காக கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்த விவசாயிகள் வியாபாரிகள் இல்லாததால் எடுத்து வந்த
விளை பொருட்களை அங்கே அடுக்கி வைத்து விட்டு சென்றுவிட்டனர்.
மீண்டும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகளை அதிகாரிகள் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாங்கள் கொண்டு வந்த விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு யாரும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஜெயங்கொண்டம் -திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் பேசி சமூக முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்தனர். அதன் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து அதிகாரிகளிடமும், ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்களிடமும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்ய, முன்பு இருந்த நடைமுறை போல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.