அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர், நவ.6: அரியலூர் அண்ணா சிலை அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.
பணி ஓய்வுக்குப் பிறகு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். பொருளாளர் ஜோதிலட்சுமி, ஒன்றிய நிர்வாகிகள் அரியலூர் லதா, ஆண்டிமடம் உமா, திருமானூர் பரமேஸ்வரி, சிஐடியு மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.