பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்: 11-வது தேசிய கைத்தறி தினம் அரியலூர் கலெக்டர் வாழ்த்து
அரியலூர், ஆக.6: 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை நாடறியச் செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் நாள் அன்று தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் ஜெயங்கொண்டம், செந்துறை, வாரியங்காவல், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு ஒரு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி குழும வளர்ச்சி திட்டம், நெசவாளர் முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை செய்து வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு இந்த 11வது தேசிய கைத்தறி தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.