திருப்பதி சென்றவரின் வீட்டில் 7 சவரன், பணம் திருட்டு
திருவொற்றியூர், மார்ச் 23: எண்ணூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பது பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக செல்போனில் முனியாண்டிக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
இதையடுத்து அவர்கள், உறவினர் வீட்டில் தங்கியிருந்த மகன் தீபன் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்து போய் பார்க்க சொல்லியுள்ளனர். அவர் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்பட ஆறரை சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தீபன் சக்கரவர்த்தி கொடுத்த புகாரின்படி, எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Advertisement