மயிலம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது: மாட்டு வண்டிகள் பறிமுதல்
மயிலம், ஜூலை 15: மயிலம் அடுத்துள்ள பொம்பூர், சங்கராபரணி ஆற்றங்கரையில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின்படி மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வருவதை பார்த்த போலீசார், அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் பொம்பூர் முருகன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பத்மநாபன் (41) மற்றும் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் நந்து (25) என்பது தெரியவந்தது. அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.