ஆட்டோ மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுங்கோழி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராகவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடித்து விட்டு தனது அண்ணன் சுரேந்தருடன் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வி.டி., மில் அருகே வந்தபோது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிறுவன் ராகவன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த ராகவனை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.