387 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தகவல் கையேடுகள் வழங்க 1500 தன்னார்வலர்கள் நியமனம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல்
திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வரும் 15ம் தேதி முதல் 387 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 387 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதல் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் தினமும் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த நகர்புறப் பகுதிகளில் 80 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 307 முகாம்களும் நடைபெறும். நகர்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அதோடு, முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத்தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இப்பணி தொடர்ச்சியாக 3 மாதங்கள் நடைபெறும். அதற்காக, 1500 தன்னார்வலர்கள் பணயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.