வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
ஊத்தங்கரை, பிப். 18: ஊத்தங்கரை அடுத்த எக்கூர் அருகே உள்ள பூசாரிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (27), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜெய்சங்கர் (24) என்பவருடன், டூவீலரில் மகனூர்பட்டியிலிருந்து திருப்பத்தூர்- சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் படத்தானூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த திருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெய்சங்கர் காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார், திருமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஜெய்சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.