சேலம் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
ஓமலூர், பிப்.24: சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, கொச்சின், ஐதாராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து நடக்கிறது. இங்கு தனியார் பயணியர் விமானங்கள், விமானி பயிற்சி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 4 விமானங்கள் வந்து செல்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கு பணியாற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு மாத சிறப்பு பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் தீயணைப்பு நிலைய சிறப்பு வல்லுநர்கள் கலந்து கொண்டு, வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.சேலம் விமான நிலையத்திற்கு அதிநவீன பப்போலோ தீயணைப்பு வாகனம் மற்றும் பழைய வாகனம் உள்ளன.
நவீன வாகனம் 6,000 லிட்டர் தண்ணீர் நிரப்பி வைத்து கொள்ளக் கூடிய கொள்ளளவு கொண்டது. அவசர காலத்தில் இது, 2 நிமிடத்தில் முழு கொள்ளளவு நீரையும் வெளியேற்றி, தீயை அணைக்க கூடியது. இந்திய விமான ஆணைய தீயணைப்பு வீரர்களுடன், தமிழக தீயணைப்பு வீரர்கள் இணைந்து, சேலம் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணிக்காலம், 5 ஆண்டுகள் என்பதால், அதன் பிறகு அந்தந்த வீரர்கள், அவர்கள் பணியாற்றிய இடத்துக்கு திரும்பி சென்றுவிடுவர். இந்நிலையில், மாநில தீயணைப்பு துறை சார்பில், தற்போது தேர்வு பெற்று புதிதாக வந்துள்ள, 8 வீரர்களுக்கு, சேலம் விமான நிலைத்தில் ஒரு மாத பயிற்சி நடந்து வருகிறது. இதில், தீ விபத்தில் விமானம், பயணியர் மீட்பு, அதிநவீன தீயணைப்பு கருவிகள், வாகன பயன்பாடு, ஓடுதளத்தில் எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பல்வேறு கள பயிற்சிகள்
அளிக்கப்பட்டு வருகிறது.