நாகர்கோவில்: குமரி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜ ஆதரவாளரும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், பாஜ ஆதரவாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சமீபத்தில், சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான் என்று கிறிஸ்தவ மத போதகர் ஒருவர், இளம்பெண்ணுடன் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் கனல் கண்ணன் பதிவு செய்திருந்த வீடியோ ஒட்டு மொத்த கிறிஸ்தவ மதத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டம் திட்டுவிளையை சேர்ந்த ஆஸ்டின் பெனட் (58) என்பவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருமாறு குமரி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கனல் கண்ணனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து நேற்று (10ம்தேதி) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில், கனல் கண்ணன் ஆஜர் ஆனார். விசாரணைக்கு பின் நேற்று மாலையில கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவரை நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2 ல் ஆஜர்படுத்தினர். அவரை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இன்று அதிகாலை 1 மணியளவில் கனல் கண்ணன் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.