காரியாபட்டி: .காரியாபட்டியில் திமுக இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக இளைஞரணி சார்பாக 2-வது மாநில மாநாட்டு தீர்மாண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் காரியாபட்டியில் நடை பெற்றது. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரசகுளம் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் – சிவகாசி ஜீவா மாநாட்டு தீர்மானங்கள் குறித்து பேசினார்.
Dhanush Kumar
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனி ஐயப்ப நகரை சேர்ந்தவர் பிருத்விராஜ் (37). விஏஓவாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கல் பட்டறை தொழில் செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு, இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், ரூ.2.60 லட்சம், இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதாதேவி, எஸ்ஐ ராமச்சந்திரன் ஆகியோர் கொள்ளையரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே சாய்பாபா கோயில் பகுதியில் நேற்று சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்தவரை டவுன் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாகுளத்தை சேர்ந்த மலர்மன்னன் என்ற மாணிக்கம் (61) என்பதும், ஓய்வு விஏஓ வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணிக்கம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை பகுதியில் குடியேறியதும், இவர் மீது காவல்நிலையங்களில் 41 திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி: சிவகாசி போலீஸ் ஸ்டேஷன்களில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேற்று மாலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். சிவகாசி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் பல்வேறு தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. புதிய சாலை வசதிகள் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகளும் மாணவ மாணவிகளும் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதால் நகரில் செயற்கையான முறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்காக நகரில் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், நேற்று சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன், திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன், சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நேரில் சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை குறைப்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
தேனி: தேனி நகர் புதிய பஸ் நிலையம் அருகே பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் மற்றும் வக்கீல் செல்வக்குமாரின் எஸ்.எஸ். சட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. முன்னாள் அணைப்பட்டி ஊராட்சி துணை தலைவர் சுருளிச்சாமி கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோமினை தேசிய செட்டியார்கள் பேரவை மாநில தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ராவும், எஸ்.எஸ். சட்ட அலுவலகத்தை மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனும் திறந்து வைத்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களை வக்கீல் செல்வக்குமார் வரவேற்றார். விழாவில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ மகாராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எல்.மூக்கையா, ஆசையன், தேனி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், தேனி நகர்மன்ற துணை தலைவர் வக்கீல் செல்வம், தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், தொழிலதிபர்கள் தேனி பிளைவுட் ராஜசேகர், கோவிந்தராஜ், முத்துகோவிந்தன் மற்றும் தேனி ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைந்த தேனி சாலை அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
வருசநாடு: கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைந்த தேனி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டுவில் தேனி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளை விட கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையின் அளவு மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்களை சாலையிலே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் கடமலைக்குண்டுவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் சில சமயம் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி கொள்கிறது. கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடமலைக்குண்டுவில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே ஆண்டில் ரயிலில் அடிபட்டு 100 பேர் பலி 17 பேரை அடையாளம் காண தனிப்படை தீவிர விசாரணை
திண்டுக்கல்: தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, வடமதுரை, அய்யலூர், கொடைரோடு, அம்பாத்துறை ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தின் வழியாக 110 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக நகரம், கிராமங்கள், மலைப்பகுதி வழியாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயலும் மனிதர்கள், ஆடுகள், மாடுகள் ரயிலில் அடிபட்டு இறப்பது அடிக்கடி நிகழ்கிறது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்துகள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளனர். இதில், 17 பேர் அடையாளம் தெரியவில்லை. எனினும், 17 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ரயில்வே போலீசாரால் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, 17 பேரை அடையாளம் காண ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இவர்கள் 17 பேரின் புகைப்படம், அங்க அடையாளங்களை வைத்தும், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம மக்கள் முன்னேற ஏராளமான திட்டங்கள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
சிவகங்கை: கிராமப்புற மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் கேஆர்.பெரியருப்பன் பேசினார். சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நகராட்சி நிர்வாகத்திடம் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி காட்டுக்குடியிருப்பு பகுதியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 1 லட்சத்து 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கன் சிறப்பாக செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பல்வேறு நிதியின் கீழ் வளர்ச்சி பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம் முதல்வர் தலமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மூலம் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் ஒவ்வொரு துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
நாட்டுப்பசு மூலம் கிடைக்கும் பொருட்களை பயிர்களுக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
சிவகங்கை: நாட்டுப்பசு மாட்டில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் பயிர்களுக்கு பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை விதைசான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட்டால் தேவைக்கு ஏற்ப சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும். குறிப்பாக தழைச்சத்து தரும் யூரியா அதிகம் இடுவதால் பூச்சிகள் அதிகம் பயிரை பாதிக்கின்றன. முன்பு விவசாயத்தில் நாட்டு பசுமாடு முக்கிய பங்கு பெற்றது. காலப்கோக்கில் கிடை அமர்த்துவது, வயலுக்கு குப்பை அடிப்பது மேலும் பசுந்தழை உரங்களான எருக்கு, கொழிஞ்சி இலைகளை இட்டு மடக்கி உழவு செய்வது போன்ற செயல்கள் குறைந்துவிட்டன. பசுமாட்டில் கிடைக்கும் ஜந்து வகையான பொருட்களான சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தினால் உரம் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எனவேதான் நாட்டுபசுமாடு நடமாடும் உரக்கடை என அழைக்கப்படுகிறது. அமுதகரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் போன்ற அங்கக உரங்கள் தயாரிக்க ஐந்து பொருட்களும் தேவை. மாட்டு கோமியத்தில் லட்சகணக்காண நலம் தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வை 15 ஆயிரத்து 107 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு மார்ச்.1ல் தொடங்கி மார்ச்.22ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 68 அரசுப்பள்ளிகள், 22 அரசு உதவி பெறும் பள்ளிகள், 53 மெட்ரிக் பள்ளிகள் உள்பட 163 அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 36 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 81 தேர்வு மையங்களில், ஆண்கள் 6 ஆயிரத்து 800பேர், பெண்கள் 8 ஆயிரத்து 307 பேர் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 107 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதுகின்றனர். இத் தேர்வு கண்காணிப்பில் 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள், 25க்கும் மேற்பட்ட வழித்தட அலுவலர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தனித்தேர்வர்களுக்கு மாவட்டத்தில் 6 தேர்வு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி: பரமக்குடியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சக்தி குமரன் செந்தில் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக பால்குட பெருவிழாவை முன்னிட்டு 48ம் ஆண்டாக சைக்கிள் யாத்திரை சென்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் சைக்கிளில் யாத்திரை சென்றனர். குருசாமி இலக்குமணன் தலைமையில் சைக்கிள் பயணம் தொடங்கியது. முன்னதாக முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.