வருசநாடு: கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைந்த தேனி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டுவில் தேனி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளை விட கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையின் அளவு மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்களை சாலையிலே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் கடமலைக்குண்டுவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் சில சமயம் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி கொள்கிறது. கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடமலைக்குண்டுவில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.