‘‘இலை கட்சியில நட்சத்திரங்களின் அந்தஸ்தும் போகும்போல… பணமும் கிடைக்காது போல… கட்சியை நம்பி பலனில்லை என்று அடிப்படை வசதி கூட செய்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்களாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதிமுகவுல விந்தியமான நடிகை, நாஞ்சிலானவர், சிங்கம் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலையின் முக்கிய பிரசார பீரங்கிகளாக இருக்காங்க. இலையின் ‘பவர்புல்’ பெண்மணி இருந்த வரையில நட்சத்திர பேச்சாளர்களை ஒவ்வொரு தேர்தலிலும் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது வழக்கம். அவர் உயிரோடு இருந்தவரை ேபச்சாளர்களின் பிரசார பட்டியலை வெளியிட்டு அவர்களை வழியனுப்பி விட்டு தான் தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்புவாராம். இதுதான் அவர் வழக்கமாம். ஆனால், தற்போது தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பேசுவதற்கான பட்டியலை இதுவரை தயாரிக்கவில்லையாம். அது மட்டுமல்லாமல் பேச்சாளர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இதுவரை அளிக்கவில்லையாம். இதனால் அந்த பேச்சாளர்கள் எல்லாம் பண வரவு எதுவும் இல்லாமல் ரொம்ப குழம்பி போய், அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசிச்சு வர்றாங்க. அது மட்டுமல்லாமல் எம்பி தேர்தலில் தாங்களே ஸ்டார் பேச்சாளர்கள் போல பேசி பிரசாரத்தில் ஈடுபட்டதால் என்ன நடந்தது என்று பேச்சாளர்கள் கேள்வியும் எழுப்பியிருக்காங்களாம். எங்களையும் கொஞ்சம் கவனிங்கனு கேட்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவையில எலக்ஷனை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் ‘செமத்தையா’ கல்லா கட்டுறாங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில பணிகளையே முடிக்காமல் முடிந்துவிட்டதாக சொல்லி அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் ‘பில்’ பாஸ் செய்து கமிஷன் வாங்கி கல்லா கட்டுறாங்களாம். ‘‘அட்வான்ஸ் ஒர்க்’’ என டெண்டர் விடாமல் ஏகப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு பணம் வாங்கி விட்டனர். ஆனால் சில உண்மையான கான்டிராக்டர்கள் கான்டிராக்ட் படி வேலையை முடித்து மாநகராட்சி வசம் முறைப்படி ஒப்படைத்துவிட்டார்களாம். ஆனால் அவர்களுக்கு இன்னும் ‘பில்’ தொகை செட்டிலாகவில்லையாம். அவர்கள் பணம் கேட்டு மாநகராட்சிக்கு நடந்து கால் தேய்ந்தது தான் மிச்சம்னு புலம்புறாங்க… இதுல மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலர் பராமரிப்பு தொகை என்ற பெயரில் வேலைகளை முடித்து கமிஷனாக பெரும் தொகை பார்த்துட்டாங்களாம். டெண்டர் விதிப்படி எந்த வேலையும் நடக்காமல் கோல்மால் செய்து பணத்தை சுரண்டிட்டாங்களாம். மாநகராட்சியின் கணக்கு பிரிவு, தணிக்கை பிரிவு, பொறியியல் பிரிவு, பர்சேஸ் பிரிவுகளில் முறைகேடு அளவு கடந்துபோய் விட்டதாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால்… ஆவணங்கள் மிஸ்சிங் என்றே சொல்கிறார்களாம்…இதனால நேர்மையான கான்டிராக்டர்கள் அடுத்த திட்டத்துக்கு பணம் இல்லாமல் அவஸ்தை படறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘குற்றவாளிகளை திறமையாக பிடித்த போலீசார் குற்றவாளிகளாக மாறிய கதையை சொல்லுங்க… ஊரே பரபரப்பா பேசுதாமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புளியந்தோப்பில் ஜனவரி மாதம் 27ம் தேதி அம்மையம்மாள் தெருவில் ஒருவரது வீட்டில் நான்கு சவரன் நகை திருடு போனது. இதை திறமையாக விசாரித்த புளியந்தோப்பு குற்றப்பிரிவு போலீசார் 2 பெண்களை கைது செய்து நேர்மையாக நடந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு தான் போலீசே குற்றவாளிகளாக மாறிய சம்பவம் அரங்கேறியது. இதனால போலீஸ் மேலேயே புகார் கொடுத்தால் பிரச்னை வரும் என்று மதில்மேல் பூனையாக தவிக்கிறார் கடைக்காரர் ஒருவர். கைதான ஒரு பெண் நகையை திருடி அருகிலுள்ள அடகு கடையில் வைத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிட்டார். திருட்டு பெண்ணை அழைத்து போய் அடகு கடைக்காரரிடம் இருந்த திருட்டு நகையை கைப்பற்றி கேஸ் பைலை மூட முயற்சித்தாங்க புளியந்தோப்பு போலீசார். அந்தப் பெண்ணிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு நகையை போலீசாருக்குத் தந்த அடகு கடை சேட்டு நகையை கொடுத்து விட்டேன் எனது 50 ஆயிரம் பணத்தை தாருங்கள் என்று கேட்டுள்ளார். போலீசார் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.நகையை பறிகொடுத்த நபர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று மீண்டும் நகையை வாங்கி விட்டனர். ஆனால் அடகு கடையை சேர்ந்த சேட்டுக்கு அவரது பணம் திரும்பி கிடைக்கவில்லை. இதுகுறித்து சேட்டு புளியந்தோப்பு குற்றப்பிரிவில் கேட்டபோது, குற்றவாளியை காரில் அழைத்துச் சென்றது.. அவருக்கு டிபன், சாப்பாடு, புலனாய்வில் ஈடுபட்ட போலீசாருக்கு சாப்பாடு, தங்க அறை என்று 50 ஆயிரம் பணம் செலவாகிவிட்டதாக சொல்லி இருக்காங்க. இதனால் நொந்து போன அடகுக் கடைக்காரர் பாதியாவது திருப்பி தர பாருங்கள் என பரிதாபமாக கேட்டுள்ளார். அதற்கும் பார்க்கலாம் என குற்றப்பிரிவு போலீசார் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால தூக்கத்துல கூட அடகுகடைக்காரருக்கு… உண்மையில் யார் போலீஸ்… யார் திருடன் என்ற கனவு வந்து போகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …