Saturday, July 27, 2024
Home » மறைந்து திரிந்து வாழும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மறைந்து திரிந்து வாழும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Neethimaan

‘‘ரிசல்ட்டுக்காவது வெளியே வருவாரா, வரமாட்டரா என மாஜி அமைச்சரின் கலக்கம் பற்றி புலம்புறாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மக்களவை தேர்தலில் டெக்ஸ்டைல்ஸ் இலைக்கட்சி சார்பில் போட்டியிட மாஜி அமைச்சர் தனது ஆதரவாளருக்கு சீட் வாங்கி கொடுத்தாரு.. வாக்கு சேகரிப்பின் போது தொகுதி முழுவதும் இவர் பிரசாரத்திற்கு போனாலும் மக்களிடம் எடுபடவில்லை. பெரும்பாலும் எதிர்ப்பு தான் காணப்பட்டதாம்.. இதனால் தேர்தலுக்கு பிறகு வேட்பாளர் பொது இடங்களில்கூட தலைகாட்டாமல் மறைந்து, திரிந்து வருகிறாராம்.. கட்சி, குடும்ப நிகழ்ச்சிகளிலும் மாஜி அமைச்சரை பார்க்க முடியவில்லையாம்.. டெபாசிட்டாவது கிடைக்குமான்னுகூட தெரிய வில்லையே என மாஜி அமைச்சர் ரொம்பவே சோகத்தில் இருந்து வருவதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்குள் பேசிக்கிறாங்க..

தேர்தல் ரிசல்ட்டுக்கு இன்னும் ஒருவாரமே இருப்பதால மாஜி அமைச்சர் கலக்கத்தில்தான் இருந்து வருகிறாராம்.. எப்படி இருந்தாலும் ரிசல்ட்டுக்காவது மாஜி அமைச்சர் வெளியே வருவாரா… வரமாட்டரா… என சொந்த கட்சி நிர்வாகிகளே புலம்பி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சியை குவிப்பதற்காக மாத சம்பளம் கொடுத்து புரோக்கர்களை கையில் வைத்திருக்கிறாராமே வரி வசூல் அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பிரச்னைக்குரிய 3 வரி வசூலர்களில், மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு வரி வசூலர் ரொம்பவே உச்சத்தில் இருக்கிறாராம்.. சுகாதார பிரிவில் இருந்து இப்பணிக்கு வந்த இவர், கரன்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறாராம்.. இவர், தனக்கு உதவியாக 7 புரோக்கர்களை கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் கொடுக்கிறாராம்..

இப்படி சின்ன மீனை போட்டு, பெரிய மீன்களை பிடிப்பதில் இவர் வல்லவராம்.. ஒரே இடத்தில் 12 வருடங்களாக ஒட்டிக்கொண்டு, பல கோடிகளை சுருட்டி விட்டாராம்.. இதேபோல், மத்திய மண்டலத்தில் 6க்கும் மேற்பட்ட வரி வசூலர்களுக்கு, இந்த மண்டலத்திற்கு உள்ளேயே கூடுதல் வரி வசூலராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளதாம்.. இவர்களில், மாநகராட்சி கல்விப்பிரிவில் இருந்து வந்த 2 பேர் தொடர்ந்து பல வருடங்களாக ேகாலோச்சி வருகிறார்களாம்.. வரி வசூலோடு சேர்த்து, சொந்த வசூலும் அதிகமாக நடப்பதால் இம்மண்டலம் விட்டு இடம்மாற மனசு வரலையாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கால்வாயை தோண்டியதால மாநகராட்சிக்கும், பொதுப்பணித்துறைக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு மேலிடம் வரை போன கதை தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நாகர்கோவிலில் சானல் கரையை தோண்டிய விவகாரத்தில் மாநகராட்சிக்கும், பொதுப்பணித்துறைக்கும் முட்டல் மோதல் வந்திருச்சாம்.. அங்குள்ள மாநகராட்சி 4வது வார்டு தெருவில், பொதுப்பணித்துறை கால்வாய் போகுது.. இதை பொதுப்பணித்துறை தூர்வாராததால் மழை நேரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுதாம்.. இதனால மாநகராட்சி சார்பில் ஜேசிபி வைச்சு அந்த கால்வாயை தோண்டி விட்டிருக்காங்க.. இப்படி தோண்டப்பட்ட மண்ணை, ஆசாரிப்பள்ளம் அனந்தனார் கால்வாய் கரை ரோட்டில் உள்ள பள்ளத்தில் கொட்டிருக்காங்க.. இந்த தகவல் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிஞ்சி, எங்க கால்வாயில் நீங்க எப்படி அனுமதி இல்லாமல் தோண்டி மண் எடுப்பீங்கன்னு கேட்டு, பணியில் இருந்த மாநகராட்சி ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன் காவல்துறையிலும் பெட்டிஷன் கொடுத்துட்டாங்களாம்..

எல்லாம் அரசு துறைதான் சார், மக்கள் பணிதான் செஞ்சி இருக்காங்க.. பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம்னு காவல்துறை கேட்க, பொதுப்பணித்துறை தரப்பில் சம்மதிக்கவே இல்லையாம்.. எப்ஐஆர் போடுங்கனு விடாப்பிடியா நின்னு இருக்கிறாங்க.. கடைசியில் பிரச்னை மேயர், ஆணையர் வரைக்கும் போய், முடிச்சு வைச்சிருக்காங்களாம்.. பொதுப்பணித்துறை காரங்க, தூர்வார மாட்டாங்க.. மழை நேரத்தில் வெள்ளம் ஊருக்குள் வந்துட்டா, மாநகராாட்சியை தான் மக்கள் குறை சொல்வாங்க.. இதனாலதான் நாங்க தோண்டி, அந்த மண்ணை கால்வாய் கரை ரோட்டில் இருக்கிற பள்ளத்தில்தான் போட்டோம். இதற்கு போய் பிரச்னை செஞ்சிட்டாங்கன்னு மாநகராட்சி பணியாளர்கள் நொந்து போயிட்டாங்களாம்.. தற்போது எப்படி பிரச்னை செய்யலாம்னு பொதுப்பணித்துறைக்கு மேலிடத்தில் இருந்து கேள்வி வந்திருப்பதாகவும் கேள்வின்னு..’’ இழுத்தார் விக்கியானந்தா.

‘‘தாமிரபரணி கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் பிரச்னை மட்டும் தீர மாட்டேங்குதாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘அல்வா ஊரின் மாநகராட்சியில் பல குடிநீர் திட்டங்கள் கொண்டு வந்தாலும் இன்னும் குடிநீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை. தாமிரபரணி ஓடியும் அதற்காக அரசு திட்டங்கள் தீட்டினாலும், மாநகராட்சி அதிகாரிகள் விநியோகத்தை சரியாக செய்வதில்லையாம்.. குறிப்பாக, மெயின் பைப்லைன்களில் பல வணிக நிறுவனங்களுக்கு முறைகேடா குடிநீர் இணைப்பு வழங்கி விடுகிறார்களாம்.. அதனால டேங்கிற்கு வரும் பைப்லைனில் பிரசர் இல்லை என்பதுதான் புகாராம்.. அதிலும் பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வே இல்லையாம்..

அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரேயே மெயின் பைப்லைனில் இருந்து விதிமுறைக்கு மாறாக பெரிய குழாய் போட்டு ஓட்டலுக்கு முறைகேடாக குடிநீர் லைன் வழங்கியிருக்காங்களாம்.. பின்னர் அந்த பகுதி குடியிருப்புகளுக்கு எப்படி குடிநீர் கிடைக்கும்.. அரை இன்ச் குழாய் என்பதுதான் விதிமுறை. ஆனால் இந்த விதிமுறை எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாம்.. அந்த மாநகராட்சி அதிகாரியை யாரும் கண்டுகொள்வதும் இல்லையாம்.. இதில் யார்யாருக்கு தொடர்பு இருக்குன்னு கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால்தான் குடிநீர் பிரச்னையே தீரும்னு பொதுஜனங்கள் குமுறுகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

nineteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi