டெல்லி : இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டியின் மீதப்போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல், இன்று தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டு வீரர்கள் அனைவரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லி அழைத்து வரப்பட உள்ளனர். மேலும் இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ளன; மீதமுள்ள போட்டிகள் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
kannappan
ஜெய்சால்மர் : பாகிஸ்தான் விமானி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உயிருடன் சிக்கினார். இந்திய, பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளார்
லாகூர் : பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால் கோட் பகுதியில் இந்தியா எதிர் தாக்குதல் தொடங்கியுள்ளது. தீவிரவாதிகள் எல்லை தாண்டி நுழைய பயிற்சி வழங்கும் சியால்கோட் பகுதியில் இந்திய ஏவுகணைகளை வீசி தாக்குதல். மேலும் பாகிஸ்தானின் பாதுகாப்பு ரேடார் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தகவல்.
ஓ.எம்.ஆர் சாலையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்களால் விபத்து அபாயம்
*வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்போரூர் : ஓ.எம்.ஆர் சாலையில் அனுமதியின்றி ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுவதால், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இதன், காரணமாக மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. மக்களை கவர்வதற்காக பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் ஓ.எம்.ஆர் சாலையில் பல இடங்களில் ராட்சத பேனர்களை நிறுவுகின்றன.
இவ்வாறு, அமைக்கப்படும் ராட்சத பேனர்களுக்கு தேவையான எந்த அரசு அனுமதியையும் இந்த நிறுவனங்கள் வாங்குவதில்லை.
உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய வரியையும் அவர்கள் செலுத்துவது இல்லை. இதுமட்டுமின்றி, ஒருமுறை நிறுவப்படும் இந்த ராட்சத பேனர்களுக்கான இரும்பு கம்பங்களை விளம்பர நிறுவனங்கள் முறையாக பராமரிப்பதில்லை.
இதன் காரணமாக பல்வேறு ராட்சத பேனர்களின் கம்பங்கள் துருப்பிடித்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலத்த காற்று வீசும்போது, இந்த ராட்சத கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள பேனர்கள் கிழிந்து கீழே விழுந்து மின் வயர்களை அறுத்து விடுகின்றன. சில பேனர்கள் வாகன ஓட்டிகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, கேளம்பாக்கம் அருகே தையூர் பகுதியில் ஓ.எம்.ஆர் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் கிழிந்து குடியிருப்பு பகுதியின் மின் கம்பங்களின் மீது விழுந்ததில் அந்த அழுத்தம் தாளாமல் 3 மின் கம்பங்கள் சரிந்து, அந்த இடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, மின் வாரிய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்வையிட்டு, மாற்று வழியில் மின்சாரம் வழங்கினர். ஆனால், சாய்ந்த மின் கம்பங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. இந்த, பிரச்னைக்கு காரணமாக ராட்சத விளம்பர பேனர்தான் என மின் வாரிய நிர்வாகமும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் தெரிவிக்கின்றனர்.ஆகவே, விளம்பர பேனர் அமைப்பதை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை : சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நேற்று செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டனர்.
இதில், முதற்கட்டமாக, கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாகும் இடத்தில் அகற்றும் நடவடிக்கையாக ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், உட்கிரீக் கவுண்டி முதல் பிரதான சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகள் பார்வையிடப்பட்டது. அங்குள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றி வாகனத்தில் ஏற்றி, இரண்டாம் நிலையான ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட சேகரிப்பு மையமான ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சேகரிப்பு மையத்திற்கு வரப்பெற்ற கட்டிட கழிவுகள் பெரிய வாகனங்களில் ஏற்றப்பட்டது. இதனை ஏற்றும் போது, மண்துகள்கள் காற்றில் பரவாமல் இருப்பதற்காக தண்ணீர் தெளித்து வாகனங்களில் ஏற்றி, கட்டிடக் கழிவுகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில் வாகனம் மூலம் பெருங்குடியில் உள்ள மூன்றாம் கட்டமான கட்டிடக் கழிவுகள் பதப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், பெருங்குடி மையத்தில் உள்ள கட்டிடக் கழிவுகள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அங்கு அமைக்கப்பட்ட பதப்படுத்தும் பெரிய இயந்திரங்களின் வாயிலாக அவை மெல்லிய மணல், கரடுமுரடான மணல், 6 மி.மீ., 12 மி.மீ., 24 மி.மீ., கற்களாக முறையே பிரித்தெடுக்கப்படுவதைப் பார்வையிட்டனர். மறுசுழற்சியில் இப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியதாவது:கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை உருவாகும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, சேகரிப்பு மையங்கள் மற்றும் பிரித்தெடுக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 201 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜனவரி 7ம் தேதியன்று கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் தீவிர தூய்மைப் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 1000 டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகிறது. ஜன.7ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை 1,00,118 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் அனைத்து பகுதிகளையும் வாரத்தில் மூன்று முறை ஆய்வு செய்து, அவ்விடங்களில் உள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை ஒப்பந்த முறைப்படி அகற்றவும், சாலைகளின் தூய்மையைப் பராமரிக்கும் விதமாக மாநகராட்சி அலுவலர்கள், திட்ட மேலாண்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மேற்பார்வையாளர்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளின் இருப்பிடத்தை தெரிவிக்க சென்னை மாநகராட்சியில் செயலி வடிவமைக்கப்பட்டு, அதன் மூலம் கட்டுமானக் கழிவுகளின் இருப்பிடங்கள் தெரிவிக்கப்பட்டு உரிய ஒப்புதல் பெற்ற பின் ஒப்பந்ததாரர் கழிவுகளை அகற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கழிவுகள் அகற்றப்பட்ட பின்னரும் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் சராசரியாக நாள்தோறும் உருவாகும் 1000 டன் அளவில் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளில் குப்பை போன்ற கழிவுகள் கலக்கும் போது, மாநகரின் தூய்மை மற்றும் அழகியல் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
அதனை தவிர்க்கும் பொருட்டு, கட்டிட கழிவுகளை சேகரித்து கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளைப் பிரித்தெடுக்கும் மையத்தில் கொட்டப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்யும் விதமாக சென்னை மாநகரில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் செயலாக்கத் தளம் அமைக்கப்பட்டு மே 2021 முதல் பயன்பாட்டில் உள்ளது.இவ்வாறு அமைக்கப்பட்ட செயல்பாட்டு தளங்களில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், அப்பகுதியில் சுற்றுச்சுவர், பசுமைப் பகுதி, சாலை வசதிகள், எடை மேடை மற்றும் மழைநீர் செல்லும் பாதை ஆகியவை அமைக்கப்பட்டு செயல்முறையில் உள்ளது. மேலும், செயலாக்கத்தின் போது தூசு வெளியேறாமல் தடுக்க நீர்த்தெளிப்பான் பயன்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலில் தூசு பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.
கட்டிடக் கழிவுகளின் செயலாக்கத்தின் மூலம் பெறப்படும் துணை பொருட்கள் அதாவது மணல், சிறுகற்கள், மத்திய நிலை கற்கள் மற்றும் பெருங்கற்கள் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. அதனை பெறும் நபர்கள் குறைந்த செலவில் சாலை அமைக்க, கான்கிரீட் பிளாக் சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை கற்கள் தயாரித்தல் மற்றும் அடித்தளம் அமைக்க பயன்படுத்துகின்றனர்.
மேலும் சட்டவிரோதமாக கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது ரூ.5,000 அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டும், தொடர் விதிமுறைகளை மீறுவோர் மீது காவல் துறையின் மூலம் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
கடந்த ஜனவரி முதல் ஏப்.10ம் தேதி வரையிலான மூன்று மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 284 பேர் மீது கண்காணிப்பு படையினரால் ரூ.14.20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை தவிர்த்திடும் வகையில் பொதுமக்கள் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் மேலாண்மைக்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சியின் இணையதளத்திலும், மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
அப்போது கூடுதல் ஆணையாளர் ஜெயசந்திர பானு ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் அமித், தலைமை பொறியாளர் (பொது) விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) சங்கரவேலு, மண்டல அலுவலர்கள் முருகதாஸ், செந்தில் முருகன், பிரிமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் பெருங்குடியில் உள்ள மையத்தில் மணல், ஜல்லி என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுவதை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்கிறார். அருகில், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் அமித். உள்படம்: கட்டிட கழிவுகள் பிரித்தெடுக்கும் மையம்.
3 மாதத்தில் 1863 புகார்கள்
சென்னை மாநகராட்சிப் பகுதியினை சுத்தமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மாற்றுவதற்கு மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வேண்டுமெனில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 1913 மூலமாக மூன்று மாத காலங்களில் 1863 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அனைத்து புகார்களும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
4,85,264 டன் மறுசுழற்சி
சென்னை மாநகரில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள இரண்டு செயலாக்கத் தளங்கள் அமைக்கப்பட்டு வணிக ரீதியான சான்றிதழ் ஏப்.20ம் தேதி வழங்கப்பட்டு, அந்த நாள் முதல் மார்ச் 31ம் தேதிவரை 5,20,032 டன் கட்டிடக் கழிவுகள் செயலாக்கத் தளத்தில் பெறப்பட்டு, 4,85,264 டன் கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சியாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செயலாக்க தளங்களில் பலனாக, 5,20,032 டன் கட்டிடக் கழிவுகள் குப்பை கொட்டும் வளாகத்தில் கலக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 4,85,264 டன் அளவிலான கட்டிடக் கழிவு மறுசுழற்சி பொருட்கள் உருவாக்கப்பட்டு, பொதுவெளியில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மாநகரின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
பங்குனி மாதம் வந்தா மயிலாப்பூர் முழுக்கவே ஒரு சந்தோஷம் பரவுவதை உணரலாம். கோவிலின் மணி ஓசை, பூ வாசனை, மக்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, எல்லாமே ஒரு நல்ல ஃபீலிங்கை தரும்.
பத்து நாட்கள் நீடிக்கும் பங்குனி திருவிழாவில், தேரோட்டம், இசை , மக்கள் கூட்டம், எல்லாமே சேர்ந்து ஒரு மனம் நிறைந்த அனுபவமா இருக்கும். அந்த அனுபவத்தில், நித்ய அமிர்தம் செய்த அந்த சின்ன உதவி கூட, ஒரு நல்ல நினைவாக மனசில் பதிஞ்சுடுச்சு.
இந்த வருட மயிலாப்பூர் பங்குனி தேரோட்டம் நடந்த நாளில், தேர் வடக்கு மாட வீதியில் நித்ய அமிர்தத்திற்கு அருகே நின்றது. வெயிலில் நின்ற பக்தர்களுக்காக, நித்ய அமிர்தம் இலவசமாக மோரும், விற்பனைக்காக சர்பத்தும் , அணிவதற்கு தொப்பிகளும் கொடுத்தது.
ஒரு கப்பில் மோர், ஒரு தொப்பி வெயிலில் நின்றவர்களுக்கு இது சின்னதா இருந்தாலும், அந்த சமயத்தில் பெரிய மகிழ்ச்சியா இருந்தது. தேரை இழுத்து சோர்ந்த மக்கள் பந்தலுக்கு வந்து ஓய்வெடுத்து, புன்னகையோட போனாங்க. இந்த பங்களிப்பு , விழாவில் ஒரு நல்ல தருணமா மாறியது.
சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் — 13 மேற்பட்ட கிளைகளை கொண்ட சென்னையின் பிரபலமான நித்ய அமிர்தம்.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் : அயனாவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
பெரம்பூர் : ஓய்வுபெறும் நாளில் சப்-இன்பெக்டருக்கு சல்யூட் அடித்த அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது ஜீப்பில் வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி ஓய்வுபெறும் நாளில் மாலை மரியாதையுடன் சக காவல்துறையினர் சார்பில் வழியனுப்பி வைப்பது வழக்கம். சில காவல் நிலையங்களில் இது சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது.
சில காவல் நிலையங்களில் இதனை பெரிதுபடுத்த மாட்டார்கள்.
உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும் போது பெரிய மைதானங்களில் விழா வைத்து அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு நடத்தி வழியனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் சாதாரண காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள பணிநிறைவு பெறும்போது விழாக்கள் பெரிய அளவில் நடைபெறாது.
பணிஓய்வு பெறும் காவலரின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களை மாலை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தி அனுப்பி வைப்பது ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓய்வுபெறும் நாளில் அவருக்கு அயனாவரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மரியாதை அவரது கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
அயனாவரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முருகன்(60). இவர் கடந்த 40 ஆண்டுகளாக காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் 60 வயது எட்டியதால் ஓய்வு பெற்றார்.
இதனை முன்னிட்டு அயனாவரம் காவல் நிலைய போலீசார் சார்பில் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினர். அதனைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு, அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரணிநாதன் சல்யூட் அடித்து தனது வாகனத்தில் முன்பக்க இருக்கையில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பதிலுக்கு சப் இன்ஸ்பெக்டர் முருகனும் நெகிழ்ச்சியுடன் இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்து விடை பெற்றார். காவல் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக நல்ல முறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு அயனாவரம் போலீசார் கொடுத்த இந்த பிரிவு உபச்சாரம் நிகழ்ச்சியால் அவரது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு
சென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்திர பங்குனிவிழா இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கீழ்க்கண்டவாறு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது
தேவடி தெருவிலிருந்து- நடுத்தெரு மற்றும் சித்ரகுளம்
நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து – கிழக்கு மாட தெரு
வடக்கு சித்ரகுளத்திலிருந்து – கிழக்கு மாட தெரு
மேற்கு சித்ரகுளம் தெருவிலிருந்து – தெற்கு மாட தெரு
டி.எஸ்.வி கோயில் தெருவிலிருந்து – தெற்கு மாட தெரு
ஆடம்ஸ் தெருவிலிருந்து – தெற்கு மாட தெரு
ஆர்.கே. மடம் சாலையிலிருந்து – தெற்கு மாட தெரு
ஆர்.கே. மடம் சாலையிலிருந்து – வடக்கு மாட தெரு
கச்சேரி சாலையிலிருந்து – மத்தள நாராயணன் தெரு
கிழக்கு அபிராமபுரத்திலிருந்து – வெங்கடேசஅக்ரஹார தெரு
புனிதமேரி சாலையிலிருந்து – ஆர்.கே. மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி
டாக்டர் ரங்கா சாலையிலிருந்து – வெங்கடேச அக்ரகாரம் சாலை
முண்டககன்னியம்மன் கோயில் தெருவிலிருந்து- கல்விவாறு தெரு நோக்கி
முண்டககன்னியம்மன் கோயில் தெருவிலிருந்து – கச்சேரிசாலை நோக்கி ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ்சாலை, சீனிவாச அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை ெநடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
மேலும் வரும் 5ம் தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், வரும் 9ம் தேதி தேர்திருவிழா அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் வரும் 10ம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
அதைப்போன்று வரும் 5ம் தேதி அதிகாரதந்தி திருவிழா 9ம் தேதி தேர்திருவிழா, 10ம் தேதி அறுபத்துமூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 100 இரு சக்கர வாகனம் மற்றும் 30). ராயபேட் நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இரு சக்கர வாகனம் மற்றும் 15 கார்).
செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இரு சக்கர வாகனம் மற்றும் 80 கார்).
காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது(100 இரு சக்கர வாகனம் மற்றும் 20 கார்). வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியது
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள தல விருட்சமான 4 வகையான சுவைகளை தரும் 3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் இந்த சீசனில் காய்க்க தொடங்கி உள்ளது.
பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற்றப்படுவது உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். இந்த, கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார்.
இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது. சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரம் கோயில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் உள்ளது.
இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்தர் வடிவில் காட்சி அளிக்கிறார். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ் தான் காட்சி தந்து மணம் முடித்தார் என சொல்லப்படுகிறது. இதனாலேயே இன்றும் இங்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த, ஒற்றை மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்கு வேதங்களைக் குறிக்கும் தெய்வீக மாமரம் என நம்பப்படுகிறது. இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது. குழந்தை பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மாமரம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப்போனது. உடனடியாக வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் இணைந்து மரத்தின் திசுக்கள் எடுக்கப்பட்டு புதிய மரக்கன்று உருவாக்கப்பட்டு, தற்போது செழித்து வளர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு சீசன் தொடங்கி உள்ளதால் தற்போது பூ பூத்து, மாமரம் காய்க்க தொடங்கி உள்ளது. தெய்வீக மாமரத்தில் மாங்காய்கள் காய்த்து உள்ளதைப் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மாமரத்தை வணங்கி செல்கின்றனர்.