‘‘பாராட்டிப் போட்ட சமூகவலைதள பதிவு புலம்பித் தவிக்கும் நிலைக்கு மாஜி அமைச்சரை கொண்டு போயிடுச்சாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘தெர்மகோல் புகழ் மாஜி அமைச்சர், சமீபத்தில் போட்ட வலைத்தள பதிவு இலைக்கட்சி வட்டாரத்தில் கடும் புகைச்சலை உண்டு பண்ணியுள்ளதாம்.. தூங்கா நகரத்தின் மூத்த நிர்வாகியே, இப்படி எதிர் முகாமில் உள்ள தேசிய கட்சி மாஜி தலைவரை பாராட்டலாமா, கட்சி மாற திட்டமிட்டுள்ளாரா என அக்கட்சி தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் வரை கேள்விகள் எழுப்பி துளைத்து விட்டனராம்.. இதுதொடர்பாக விசாரித்தபோது, வேறு சில தகவல்கள் கிடைத்திருக்கு.. அதாவது, கடந்த சில ஆண்டாகவே, தாமரை கட்சியின் தேசிய, மாநில தலைமையை தெர்மகோல் மாஜி, தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தாரு.. எம்பி தேர்தல் பிரசாரத்திலும் இது எதிரொலித்தது.. இதற்காக தேர்தல் முடிந்ததும் தன்னை தலைமை கூப்பிட்டு பாராட்டுமென எதிர்பார்த்தாராம் தெர்மகோல் மாஜி. ஆனால், தலைமை கண்டும், காணாமல் இருந்து விட்டதாம்.. மாவட்டத்தில் மற்றொரு மாஜி அமைச்சரைத்தான் தலைமை முன்னிலைப்படுத்துவதாக கருதி, கடும் அப்செட்டில் இருந்தவர், ஒரு சலசலப்பை கட்சிக்குள் ஏற்படுத்தணும்னு இவ்வாறு பதிவிட்டதாகவும் கூறி வர்றாங்க.. அதே நேரம், இந்த பதிவுக்கு தலைமை தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு கண்டனம் பறந்து இருக்காம்.. ‘எதிர்த்தேன் பாராட்டலை… எதிர்க்கட்சிக்காரரை பாராட்டி பதிவு போட்டால் தலைமை திட்டுகிறது.. நல்லது செய்பவர்களை பாராட்டுவது தப்பா…’ என தற்போது தனது ஆதரவாளர்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் முடிவு வரும் முன்பே அடுத்த சட்டமன்ற தேர்தல் பிளானுக்கு போயிட்டாராமே பெண் வேட்பாளர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன நாடாளுமன்ற தொகுதியில் தாமரை கட்சி கூட்டணி சார்பில் மாம்பழ கட்சியைச் சேர்ந்த பொட்டுக்கு மறுபெயர் கொண்ட பெண் வேட்பாளர் போட்டியிட்டாரு.. இவர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர் என முடியும் தொகுதியில் இலைக்கட்சியின் கூட்டணியில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க முடியாமல் மண்ணை கவ்வினாரு.. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவதைவிட, வயல்வெளியில் நாற்று நடுவது, குதிரை வண்டி ஓட்டுவது, சாலை ஓர காய்கறி கடையில் வியாபாரம் செய்வதுன்னு புதுப்புது ஐடியாக்கள் மூலம் போட்டோவுக்கு போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினாரு.. இவரது செயல்பாடுகளை பிடிக்காத உள்ளூர் தாமரை, மாம்பழ கட்சி நிர்வாகிகள் அவருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கிட்டாங்க.. இதனால் தனக்கு வேண்டப்பட்ட வெளிமாவட்டத்தினரை தொகுதியில் தங்க வைத்து வேலை பார்க்க வைத்துள்ளார் வேட்பாளர்.. பூட்டு மாவட்டத்தில் பட்டி என முடியும் ஊரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பட்டாசு நகரத்திலேயே அதிகம் வசித்தவர். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் நிலையில் திடீரென பூட்டு தொகுதி பைபாஸ் ரோட்டில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறி இருக்கிறாரு.. 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து, வாடகைக்கு குடியேறியுள்ளதாக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. எம்பி தேர்தல் முடிவே வரலை.. அதற்குள் அடுத்த சட்டமன்ற தேர்தலை பிளான் பண்ணிக்கிட்டிருக்கிறாரேன்னு அவரது கட்சியினரே புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காட்டன் சூதாட்ட ஆசாமியுடன் திருத்தல யாத்திரை போன அதிகாரிக்கு டோஸ் விழுந்த கதை தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூரின் வழியாக செல்லும் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள சத்தான ஊரின் 3 ஸ்டார் அதிகாரி ஒருவர் திடீரென கடந்த வாரம் அவசர விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றாராம்.. ஏற்கனவே திருவிழாவில் அடிதடி தகராறு, சாலை மறியல், கைதுன்னு பிரச்னை ஓடிக் கொண்டிருக்க, இவர் விடுப்பு எடுத்தது தனது சொந்த அவசர வேலையாக இருக்கும்னுதான் உயர்அதிகாரி நினைத்தாராம்.. ஆனால் 3 ஸ்டார் அதிகாரியான மன்னரானவர், அந்த பகுதி ‘காட்டன் சூதாட்ட’ மன்னரான மீன் கொடியேந்திய மன்னர் பெயர் கொண்டவருடன் தெலுங்கு மாநிலம் துங்கபத்ரா கரையில் உள்ள மகான் ஒருவரின் கோயிலுக்கு யாத்திரை சென்று வந்தாராம்.. இந்த தகவல் பெரிய அதிகாரிக்கு தெரிந்து கடுப்பாகி, அவரை அழைத்து டோஸ் விட்டாராம்.. கோயிலுக்கு போனது தப்பில்லை. யாருடன் போனார் என்பதுதான் கேள்வி என்பதே காக்கிகள் வட்டாரத்தில் பேசும் பொருளாகி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெபாசிட் கிடைக்குமான்னு தெரியும் முன்பே நான் தான்டா கேபினட் அமைச்சருன்னு கெத்து காட்டுகிறாராமே தாமரை வேட்பாளர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தாமரைக்கட்சி சார்பில் வசந்தமான ஒருவர் போட்டியிட்டார். தற்போதைய கள நிலவரப்படி இவர், மூன்றாவது இடத்தில் இருக்கிறாராம்.. ஆனால், இவர், நான் ஜெயித்து விட்டேன்… அடுத்த அமைச்சரு நான்தான்.. அதுவும் கேபினட் அமைச்சர் பதவி தருவதாக அமித்ஷா கூறிவிட்டார்…. என்னை யாரும் அசைக்க முடியாதுன்னு தொகுதிக்குள் கெத்து காட்டி வருகிறாராம்.. இவரது காருக்கு முன்னால், ஒரு பைலட் கார் செல்வது போல் இவரே ஏற்பாடு செய்திருக்கிறார்..
அத்துடன், இவரது காரை தொடர்ந்து சில கார்கள் அணிவகுப்பு நடத்துவதுபோல் அடி, பொடிகளை காரில் அழைத்துச்சென்று பந்தா காட்டுகிறாராம்… இவர், தொகுதிக்குள் காரில் பயணித்தால் அமைச்சர் கார் உலா வருவதுபோல் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறாராம்.. `அண்ணனுக்கு தேசிய அரசியலில் சில முக்கிய இடம் காத்துக்கிட்டு இருக்கு…’ என்கிறார்கள் இவரது அடிபொடிகள். `அடேயப்பா… முதலில், டெபாசிட் வாங்குறீங்களான்னு பார்ப்போம்.. அதற்கு பிறகு இல்ல இருக்கு மிச்ச களையெடுப்புன்னு..’ தாமரை கட்சி நிர்வாகிகள் பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.